காரில் இருந்த நபர் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு.. மதுரையில் பரபரப்பு

 

மேலூர் அருகே உள்ள கீழவளவுப்பகுதியில் காரில் இருந்த நபர் மீது டிபன்பாக்ஸ் குண்டுவீசப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார். இவர் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே தன் காரின் உள்ளே இருந்துள்ளார். அப்போது, அவ்வழியே மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இவர் மீது டிபன் பாக்ஸ் குண்டினை வீசியுள்ளனர்.

இந்நிலையில், டிபன் பாக்ஸ் குண்டு நவீனின் கார் கண்ணாடியின் மீது பட்டு தெரிக்கவே, சுதாரித்து கொண்ட நவீன் அங்கிருந்து தப்பியுள்ளார். இருப்பினும் அவரது கையில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், நவீனின் காரின் அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் என்பவருக்கும் இதனால் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த நவீன் குமார் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும்,லேசான காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மேலூரில் உள்ள அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு, தற்போது கிசிக்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்து சம்பவம் நடைப்பெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தற்போது கிடைத்துள்ள முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இது நிகழந்ததாக கூறப்படுகிறது . இருப்பினும், இதனை நிகழ்த்தியவர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, போலீசார் காரை கைப்பற்றி தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.