கதிரடிக்கும் இயந்திரம் கவிழ்ந்து கோர விபத்து.. 2 பெண்கள் உடல் நசுங்கி பலி..!

 

ஆத்தூர் அருகே கதிர் அடிக்கும் இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கீரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு சொந்தமான மக்காசோள கதிர் அடிக்கும் இயந்திரத்தை அதே பகுதியை சேர்ந்த செம்மலை என்பவர் டிராக்டர் இணைத்து ஓட்டிச் சென்றுள்ளார். அந்த டிராக்டரில் கீரிப்பட்டி பகுதியை சேர்ந்த ராணி, கன்னியம்மாள், அம்மாசி, பழனியம்மாள், ஜெயா, நதியா, ஆகியோர் மேல்தொம்பை பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.

இணைக்கப்பட்ட அறுவடை இயந்திரம் அண்ணா நகர் சாலை வளைவில் வந்தபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் டிராக்டரில் இருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர். இதில் அறுவடை இயந்திரத்தில் அடிப்பகுதியில் சிக்கிய அயோத்தி மனைவி ஜெயா (40), ராஜேஷ் கண்ணன் மனைவி நதியா (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த ராணி (55), கன்னியம்மாள் (47), அம்மாசி (77) மற்றும் பழனியம்மாள் (48) ஆகியோர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மல்லியக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.