காதலிக்கு திருமணம் நடப்பதாக நினைத்து.. ரகளை ஈடுபட்ட போதை காதலனுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!!

 

தக்கலை அருகே காதலிக்கு திருமணம் நடைபெறுவதாக கருதி, மதுபோதையில் காதலியின் உறவினர் திருமண வீட்டில் ரகளை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் வசித்து வருபவர் இளைஞர் சபின். இவர், டெம்போ வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர், அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு காதலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், சபின் காதலித்து வந்ததாக சொல்லப்படும் பெண்ணின் உறவுக்கார பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. சொந்த பந்தங்கள் நிறைந்து திருமண வீடு களை கட்டியிருந்தது. அப்போது மது போதையில் அங்கு வந்த சபின் தனது காதலிக்குதான் தனக்கு தெரியாமல் திருமணம் ஏற்பாடு நடப்பதாக நினைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். 

திருமண வீட்டில் இருந்த காதலியின் பெற்றோரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சபினின் ரகளை தாங்க முடியதாதால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சபினை எச்சரித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் சபீன் அங்கு போலீசாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். 

இதையடுத்து தங்களை கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் டெம்போ டிரைவர் சபின் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.