காதல் கணவரை பிரிந்த இளம்பெண்.. நண்பர்களுக்கு விருந்தாக்கிய இளைஞர் கைது!

 

மேட்டுப்பாளையத்தில் இளம்பெண்ணை அறையில் அடைத்து வைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், தான் காதலித்த நபரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். அதன்பின் கணவன் - மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அந்த இளம்பெண், கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வீரபாண்டி ஜோதிபுரம் பகுதியை சேர்ந்த சிவனேஷ் பாபு (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து அவர், இளம்பெண்ணை மேட்டுப்பாளையம் ஓடந்துறை ராமசாமி நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்தார். இந்த நிலையில் இளம்பெண்ணை மிரட்டி சிவனேஷ் பாபு மற்றும் அவரது நண்பரான மெக்கானிக் ராகுல் (38) ஆகிய 2 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

மேலும், ராகுலின் நண்பர் செந்தில்குமார் (35) என்பவரை புரோக்கராக பயன்படுத்தி அந்த இளம்பெண்ணை அறையில் அடைத்து வைத்தும், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றும் பல்வேறு நபர்களுக்கு விருந்தாக்கி உள்ளனர். இதனால் அவர்களிடம் இருந்து தப்பி வந்த இளம்பெண் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை உறவினர்கள் மீட்டனர். அவர்களிடம் நடந்த சம்பவம் பற்றி இளம்பெண் கூறினார்.

இது குறித்து அவரது உறவினர் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராகுல், செந்தில்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சிவனேஷ் பாபுவையும் போலீசார் கைது செய்தனர். 

பின்னர் அவரை போலீசார் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இளம்பெண் பலாத்கார வழக்கில் முக்கிய நபர் கைதாகி உள்ளதால் பல உண்மைகள் வெளிவரும். இதன் மூலம் மேலும், பலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.