வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுவன் பலி.. விளையாடிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த சோகம்!!

 

ஓசூர் அருகே கனமழை காரணமாக பழமையான வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதனால் அதிக அளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளது. 

இந்த நிலையில், பசவனத்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளியான அவரது மனைவி, இரு பிள்ளைகள், அவரது பெற்றோர் என 6 பேர் உள்ளனர். அந்த பகுதியில் மழை பெய்ததனால் இவர்களது வீடு இடியும் தருவாயில் இருந்தது. 

இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது குழந்தை ரக்சித் பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து குழந்தையை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் குழந்தையின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராமமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.