கண்மாய்க்குள் கிடந்த மண்டை ஓடு, எலும்புகள்.. திருப்பரங்குன்றம் அருகே பரபரப்பு! போலீசார் விசாரணை

 

திருப்பரங்குன்றம் அருகே கண்மாய்க்குள் மனித மண்டை ஓடு, எலும்புகள் கிடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாயில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் குளிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது தண்ணீரில் ஆங்காங்கே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் தனித்தனியாக கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு நிலையூர் முதல் பிட் ஊராட்சி கிராம நிர்வாக அதிகாரி கந்தவேல் புகார் செய்தார். 

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா, சப்-இன்ஸ்பெக்டர் சாமியப்பன் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து கண்மாய்க்குள் கிடந்த எலும்பு துண்டுகளை ஒன்றாக சேர்த்தனர். இதில் மண்டை ஓடு, கை, கால் எலும்புகள், விலா எலும்புகள் என மீட்கப்பட்டன.

மனித எலும்புகள் மட்டுமே கிடைத்துள்ளதால் பல மாதங்களுக்கு முன்பே ஆண் அல்லது பெண் இறந்து இருக்கலாம். கண்மாய் தண்ணீரில் குளிக்கும்போது ஆழமானபகுதிக்குள் சிக்கி இறந்து போனாரா? அல்லது அடித்து கொன்று கண்மாய்க்குள் வீசி சென்று விட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் மதுரையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடுகளை ரசாயன பரிசோனை செய்தனர். மேலும் ஆஸ்டின்பட்டி போலீசார் திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள பகுதிகளில் காணாமல் போனவர்கள் பட்டியல் சேகரித்து விசாரித்து வருகின்றனர். கண்மாயில் மனித மண்டை ஓடு, எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.