பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. ஓட்டுநர் பலி.. குறுக்கே வந்த காட்டுப்பன்றியால் விபரீதம்!!

 

கமுதி அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லமருது (35). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவர் தினமும் முத்துப்பட்டி, பெருமாள்தேவன் பட்டி, மூலக்கரைப்பட்டி, வடுகபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளி மாணவ மாணவிகளை கமுதியில் உள்ள பள்ளிகளுக்கு ஏற்றி வழக்கம்.

இந்த நிலையில் நல்லமுருது வழக்கம் போல் இன்று காலை பள்ளி மாணவ மாணவிகளை கமுதியில் உள்ள பள்ளிகளுக்கு தனது ஆட்டோவில் ஏற்றி வந்தார். அப்போது பெருமாள்தேவன் பட்டி பகுதியில் திடீரென சாலையின் குறுக்கே வந்த காட்டுப்பன்றி ஆட்டோ மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோ ஓட்டுநர் உயிருக்கு போராடிய நிலையில் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதேபோல் விபத்தில் படுகாயம் அடைந்த பள்ளி மாணவர்களும் அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்டனர். இதைதொடர்ந்து சிகிச்சை பலனின்றி ஆட்டோ ஓட்டுநர் நல்லமருது (35)  உயிரிழந்தார்.

பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மூன்று மாணவர்கள் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.