திடீரென இடிந்து விழுந்த அங்கன்வாடி மேற்கூரை.. குழந்தை உள்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

 

மதுரை அருகே அங்கன்வாடி மையத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தை மற்றும் சமையலர் முனியம்மாள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் முத்துப்பட்டி பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி அருகே உள்ள வீரகாளி அம்மன் கோவில் தெருவில் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் பொருள் தனி அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த முத்துப்பட்டி அங்கன்வாடியில் ஆசிரியர்கள் இன்று வராததால், அங்கு உணவு தயாரிக்கும் முனியம்மாள் (47), பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு உணவுப் பொருட்களை வைக்கப்பட்டுள்ள அறைகள் அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், உணவு பொருள்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கான்கிரீட் மேல் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் சமையல் பெண் முனியம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே போல், 2 வயதான கவனிக்காஸ்ரீ குழந்தை கையில் விழுந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மேற்கூரை பெயர்ந்து விழுந்த தகவல் அறிந்ததும், குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி இருந்த பெற்றோர்கள் பதறி அடித்து வந்து அவர்களுடைய குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கன்வாடி மையம் அமைந்துள்ள பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.