வீட்டை கொளுத்திய எலி.. பல லட்சம் பொருட்கள் நாசம்.. தூத்துக்குடி அருகே அதிர்ச்சி!

 

சாத்தான்குளம் அருகே எலியின் சேட்டையில் குடிசை வீடு தீபிடித்து எரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்து உள்ள பனைவிளை கிராமத்தை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவர் இறந்து போன தனது மகளின் படத்துக்கு தீபமேற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்றிரவு, அவர் வழக்கம்போல் தீபமேற்றி வைத்திருந்தார். 

இந்தநிலையில், அங்கு வந்த எலி ஒன்று, தீபத்தின் திரியை வாயில் கவ்வியபடி கூரையின் மீது வைத்ததாக கூறப்படுகிறது. கூரை முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முற்பட்டனர். அதற்குள் வீடு முழுவதும் பற்றி எரிந்துள்ளது. 

இதில், சுயம்புலிங்கம் அவருடைய 2 மகள்கள் ஆகியோர் தீக்காயம் அடைந்தனர். வீட்டில் இருந்த 4 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர். 

இந்த விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பீரோ, கட்டில், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் துணிகள் எரிந்து சேதம் அடைந்தன. இந்த விபத்து குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.