மின் கம்பி அறுந்து விழுந்து சாலையில் சென்றவர் பலி.. குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியபோது சோகம்!

 

சாலையில் சென்று கொண்டிருந்த நபர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வந்தவர் முகமது இஸ்மாயில் (40). இவர், தனது மகன் மற்றும் மகளை ஒட்டியம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பெரும்பாக்கம் நேதாஜி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையோரத்தில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின்சார வயர் அறுந்து இஸ்மாயில் மீது விழுந்துள்ளது. 

இதில் அவர் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் சாலையில் சென்ற நாய் மீது மின்சாரம் பாய்ந்து நாயும் பரிதாபமாக உயிரிழந்தது. அதே நேரம் ஒரு டாட்டா ஏசி வாகனத்திலும் மின் வயர் விழுந்தும் அதிர்ஷ்டவசமாக டாட்டா ஏசி ஓட்டுனர் உயிர்தப்பினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்தில் குவிந்து அப்பகுதி மக்கள் சடலத்தை சுற்றி நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை, இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.