அடுத்த ஷாக்.. உயிரியல் பூங்காக்களின் நுழைவு கட்டணம் திடீர் உயர்வு!

 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர் (பெரிய உயிரியல் பூங்கா வகை), கிண்டி சிறுவர் பூங்கா (நடுத்தர வகை உயிரியல் பூங்கா), குரும்பபட்டி உயிரியல் பூங்கா, சேலம் (சிறிய வகை உயிரியல் பூங்கா) மற்றும் அமிர்தி உயிரியல் பூங்கா, வேலூர் (சிறிய வகை உயிரியல் பூங்கா) ஆகிய நான்கு உயிரியல் பூங்காக்கள், தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட நான்கு உயிரியல் பூங்காக்களும் பார்வையாளர்களிடமிருந்து பெறப்படும் நுழைவுக் கட்டண வருவாயின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. உணவு, ஊதியம், அத்தியாவசிய மற்றும் கட்டாய பராமரிப்பு மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளுக்கான செலவினங்களைச் சமாளிக்க வருவாய் பயன்படுத்தப்படுகிறது.

உயிரியல் பூங்கா நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கும் இந்த உயிரியல் பூங்காக்களின் நுழைவுக் கட்டணம் மாற்றியமைக்கப்படுகின்றன. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் நுழைவுக் கட்டணம் கடைசியாக 2020-ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.

உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகள், பறவைகள் போன்றவற்றை பராமரிப்பதற்கும், பார்வையாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும் பார்வையாளர் நுழைவுக் கட்டணத்தை மாற்றியமைப்பது இன்றியமையாததாகிவிட்டது. அதன்படி, 16.11.2022 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஒரு முன்மொழிவு வைக்கப்பட்டது.

நான்கு உயிரியல் பூங்காக்களின் நுழைவுக் கட்டணத்தை திருத்தியமைப்பதற்கான முன்மொழிவுக்கு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. திருத்திய நுழைவு கட்டண அமைப்பில் உள்ள சிறப்பம்சங்கள் பின்வருமாறு,

  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தற்போது இலவச நுழைவு கட்டணம் தொடர்கிறது
  • 5- 12 மற்றும் 13-17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுடன் வரும்
  • ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக ரூ 20/- மட்டும் வசூலிக்கப்படும்.
  • இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் ஏற்கெனவே உள்ள இருவேறு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு ஒரே மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
  • தற்போதுள்ள சக்கர நாற்காலிக்கான கட்டணம் ருபாய் 25 ரத்து செய்யப்படுகிறது.
  • சைக்கிள் மற்றும் ரிக்சாவுக்கு நிறுத்துமிடக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • டைம்-ஸ்லாட் நிறுத்துமிடக் கட்டணம் முறை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
  • இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வேன், டெம்போ பயணிகள், மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்தக் கட்டணம் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவுக் கட்டணம் ரூபாய் 115 லிருந்து ரூபாய் 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனக் கட்டணம் ரூபாய் 100 லிருந்து ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சஃபாரி வாகனக் கட்டணம் ரூபாய் 50 லிருந்து ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வீடியோ ஒலிப்பதிவு (Video camera) கட்டணம் ரூபாய் 500 லிருந்து ரூபாய் 750 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.