பிறந்தநாள் அன்றே முடிந்த வாழ்க்கை.. தாயிடம் வாழ்த்து பெற ரேபிடோவில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

 

சென்னையில் பிறந்தநாள் வாழ்த்து பெறுவதற்காக ரேபிடோ பைக்கில் சென்ற பெண் லாரி மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் சேவிகா (39). இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒப்பனை கலைஞராக பணி புரிந்து வந்துள்ளார். தனது பிறந்த நாளை ஒட்டி சென்னை வியாசர்பாடியில் உள்ள தனது தாயார் இல்லத்திற்கு சென்று வாழ்த்து பெறுவதற்காக பைக் டாக்ஸி சேவை அளித்து வரும் ராபிடோவில் புக் செய்து சாலையில் பயணித்துள்ளார்.

தேனாம்பேட்டை மூப்பனார் பாலம் அருகே ரேபிடோ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சேவிகா நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனாம்பேட்டை போலீசார் ரத்த வெள்ளத்தில் கடந்த சேவிகாவை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சேவிகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதிப்படுத்தி தற்போது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து நடக்க காரணமாக இருந்த வாகனத்தையும் அதன் ஒட்டுநரையும் தேடி வருகின்றனர். அதேசமயம் சேவிகாவை அழைத்துச் சென்ற பைக் டாக்ஸி ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்பிழைத்த நிலையில் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு போலீசார் சார்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.