கள்ளக்காதலை கண்டித்த கணவர்... மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து கொன்ற மனைவி!! மதுராந்தகம் அருகே பயங்கரம்!

 

மதுராந்தகம் அருகே கணவனை கொலை செய்ய மதுபாட்டிலில் ஆசிட் கலந்து கொடுத்து மதுவை குடித்த கணவன் மற்றும் அவரது நண்பன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் செங்கல்பட்டில் கோழி இறைச்சி கடையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவிதா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் கவிதாவிற்கும் அங்கு பணிபுரியும் மற்றொரு நபருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. 

இந்த தகாத உறவு அவரது கணவர் சுகுமாருக்கு தெரிய வரவே கவிதாவை கடுமையாக சுகுமார் கண்டித்துள்ளார். இதனால் கணவருடன் ஏற்பட்ட தொடர் பிரச்னை காரணமாக அவரை கொலை செய்ய கவிதா திட்டமிட்டுள்ளார். இதற்காக சுகுமாரின் அண்ணன் மணி என்பவரிடம் ரூ.400 பணம் கொடுத்து இரண்டு மது பாட்டிலை வாங்கி வர சொல்லி அதனை வாங்கி வைத்துள்ளார். 

பின்னர் அதில் ஒரு பாட்டிலை மணியிடம் கொடுத்துவிட்டு ஒரு பாட்டில் மட்டும் இவர் எடுத்துச் சென்று அந்த மது பாட்டிலில் சிரஞ்சி மூலம் மதுவில் ஆசிட்டை கலந்துள்ளார். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் கணவருக்கு உங்களுக்கு யாரோ கொடுத்துள்ளதாக கோரி இந்த மதுபாட்டிலை கவிதா தன் கணவரிடம் கொடுத்துள்ளார். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவர் முழு போதையில் இருப்பதால் பிறகு குடித்துக் கொள்ளலாம் என வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மறுநாள் திங்கட்கிழமை காலையில்  அவர் வேலைக்கு செல்லும் பொழுது இந்த மதுபாட்டிலை சுகுமார் எடுத்துச் சென்றுள்ளார். மதிய உணவு நேரத்தின்போது மதுவை குடிக்க முயற்சிக்கும் பொழுது அவருடன் பணி செய்யும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அவருடைய பல ஆண்டுகால நண்பருமான ஹரிலால் என்பவர் தனக்கும் மதுவில் பங்கு வேண்டும் என கேட்டு வாங்கி குடித்துள்ளார்.

மது அருந்திவிட்டு உணவு முடித்துக் கொண்டு மீண்டும் வேலைக்கு செல்லும் இருவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஹாரிலால் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர் பிறகு வீட்டுக்கு சென்ற சுகுமாருக்கும் உடல் நிலை மோசமானதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் இருவரும் மதுவில் விஷம் கலந்து அருந்தியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் படாளம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மனைவி கவிதா மீது சந்தேகம் வர அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் மதுவில் ஆசிட்டை ஊசி மூலம் கலந்து கொடுத்தது தெரியவந்தது. போலீசார் அந்த பெண்ணிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.