வாளியில் சூடு தண்ணீர் ஊற்றி வைத்த தந்தை.. துடிதுடித்து பலியான குழந்தை.. சென்னையில் சோகம்!

 

சென்னை அரும்பாக்கத்தில் சுடு தண்ணீர் கொட்டி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் ஜெகநாதன் நகரில் வசித்து வருபவர் பரத்குமார் (37). இவர், தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் அரிகரன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது. பரத்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு குளிப்பதற்காக வெந்நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வீட்டில் வைத்திருந்தார். 

அப்போது இவரது ஒன்றரை வயது குழந்தையான அரிகரன் பொற்றோர்கள் கவனிக்காத நேரத்தில் வெந்நீர் ஊற்றி வைத்திருந்த பாத்திரம் அருகே நடந்து சென்று எதிர்பாராத விதமாக அதை கொட்டினார். பாத்திரத்தில் இருந்த வெந்நீர் குழந்தையின் மீது அப்படியே கொட்டியது.

இதில் படுகாயமடைந்து வலியால் அலறி துடித்த குழந்தையை கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் உடனடியாக குழந்தையை மீட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு குழந்தை அரிஹரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன குழந்தை அரிகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வெண்ணீர் உடலில் கொட்டி ஒன்றரை வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.