எமனாக மாறிய குடி பழக்கம்.. புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!

 

சிங்கப்பெருமாள் கோவில் அருகே போதையில் மது என நினைத்து வேதியல் திரவத்தை குடித்த புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்து உள்ள வெண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனியார் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 3ம் தேதி நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த இவரது மாமா பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 

மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவருடைய வீட்டில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில கடந்த 10-ம் தேதி மதியம் மது போதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் அவருடைய மனைவியுடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. 

அந்த சண்டையில் திடீரென பாக்கெட்டில் இருந்த மது பாட்டில் கீழே விழுந்துள்ளது. பின்னர் 2 மணி நேரம் கழித்து மது பாட்டில் என போதையில் மணிகண்டன் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வைத்திருந்த தர்பன் என்கிற வேதியல் திரவத்தை எடுத்து குடித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சத்தம் போட்டார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மணிகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போதையில் மது என நினைத்து வேதியல் திரவத்தை தவறுதலாக குடித்த புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.