ஆறிப்போன டீ தருகிறாயே..? கேட்ட மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மருமகள்!

 

ஆறிப்போன டீ கொடுத்ததற்காக திட்டியதால் மாமியாரை இரும்பு கம்பியால் மருமகள் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மலைக்குடிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி பழனியம்மாள் (75). இவர்களுடைய மகன் சுப்பிரமணி (45). இவர் அப்பகுதியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கனகு (42). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனியம்மாள் தனது மருமகள் கனகுவிடம் டீ கேட்டுள்ளார். இதையடுத்து அவர் டீ போட்டு கொடுத்துள்ளார். ஆனால் டீ ஆறிப்போய் இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பழனியம்மாள் தனது மருமகள் கனகுவை திட்டியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த கனகு அருகே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து பழனியம்மாளின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பழனியம்மாள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பயந்துபோன கனகு தகவல் தெரிவித்ததில், உறவினர்கள் திரண்டு வந்து பழனியம்மாளை விராலிமலை மருத்துவனையில் சேர்த்தனர். 

அங்கு உடல்நிலை மோசமானதால் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற கனகுவை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.