இளைஞரை அரை நிர்வாணமாக்கி ஓட விட்ட பாமக நிர்வாகி.. அவமானத்தில் உயிரை விட்ட சோகம்!!

 

விழுப்புரம் அருகே பரியேறும் பெருமாள் பட பாணியில் அரைநிர்வணமாக ஓட விட்டு சித்ரவதை செய்ததில், இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வளர்மதி (50). இவர் நேற்று தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், எனக்கு லோகேஸ்வரன், சந்துரு (32) என்ற 2 மகன்கள். எனது இளைய மகன் சந்துரு, சேர்ந்தனூர் கிராமத்தை சேர்ந்த பாமக ஊராட்சி மன்ற துணைத் தலைவரான குமரவேலிடம் சீட்டு பணம் கட்டி வந்தார். அவருக்கு தர வேண்டிய ரூ.95 ஆயிரத்துக்கு வட்டிபோட்டு ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை தருமாறு கேட்டு எனது மகனிடம் தகராறு செய்தனர். 

அதற்கு சந்துரு ரூ.32 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதி பணத்தை விரைவில் தருவதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர், பணத்தை முழுவதுமாக தரும்படி கேட்டு கடந்த 11-ம் தேதியன்று எனது மகனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதோடு வேட்டியை அவிழ்த்துவிட்டு அவமானப் படுத்தியுள்ளனர். 

இதனால் அவமானம் தாங்க முடியாமல் எனது மகன் சந்துரு, அன்று மதியம் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உடனே அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். எனவே எனது மகன் சந்துரு இறப்பிற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். 

மனுவை பெற்று கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.