லேப்டாப்பில் சார்ஜ் போட்டுக்கொண்டே வேலை செய்த இளம்பெண் மரணம்

 

ராஜபாளையம் அருகே லேப்டாப்பை சார்ஜ் போட்ட படி பயன்படுத்திய இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த ராஜாராம். இவரது மனைவி செந்தி மயில் (22). இருவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், தற்போது ராஜாராம் துபாயில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், செந்தி மயில் நேற்று மாலை தனது லேப்டாப்பை சார்ஜ் போட்ட படி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது லேப்டாப் வயரில் இருந்து திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. 

சத்தம் கேட்டு வந்த அவரது தந்தை சக்தி குமார், அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த சேத்தூர் போலீசார் இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இளம் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சொக்கநாதன் புத்தூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.