தனியார் பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியை சடலமாக மீட்பு.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்

 

சின்னமனூரில் தனியார் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் ஜெனட்மேரி (35). இவர் தேனி மாவட்டம் சின்னமனூரில் செயல்பட்டு வரும், திருச்சபை பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், சின்னமனூர் பகுதியில் கன்னியாஸ்திரிகள் தாங்கும் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் மற்ற கன்னியாஸ்திரிகள் அனைவரும் பள்ளிக்குக் கிளம்பி உள்ளனர். ஆனால், வெகு நேரமாக ஜெனட்மேரியின் அறைக் கதவு மட்டும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சக கன்னியாஸ்திரிகள் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர்.

நீண்ட நேரமாக தட்டியும் சத்தமும் வராததால் உள்ளே சென்று பார்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கன்னியாஸ்திரிகள், உடனடியாக சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த ஜெனட்மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.