திடீரென 200 மீட்டர் உள்வாங்கிய கடல்.. அச்சத்தில் உறைந்துபோன மீனவர்கள்.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு

 

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் திடீரென கடல் 200 மீட்டர் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், சுமார் 200-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டுப் படகுகளை நிறுத்திவைத்துவிட்டு வீட்டிற்கு சென்ற மீனவர்கள், துறைமுகத்துக்கு வந்து பார்த்தபோது சுமார் 200 மீட்டர் கடல் உள்வாங்கியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நாட்டுப்படகுகள் தரை தட்டி நிற்பதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து கடல் ஆராய்ச்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் உள்வாங்குவதும், சிறிது நேரத்திற்கு பிறகு இயல்பு நிலை திரும்பும் என்று கூறியுள்ளார் மேலும் மீனவர்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் அதிகாரி தெரிவித்திருக்கிறார். இதேபோல் கடந்த ஜூலை மாதம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் திடீரென கடல் 200 மீட்டர் உள்வாங்கியது குறிப்பிடத்தக்கது.