வாரிசு வேலை தகராறு... ரத்த வெள்ளத்தில் வீடு.. வாசலில் கிடந்த சடலம்!

 

சிவகாசி அருகே வாரிசு வேலை வாங்குவதில் ஏற்பட்ட தகராறு உறவினர்கள் இருவர் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஸ்டேட் பேங்க் காலனியில் வசித்து வந்தவர் முருகேஸ்வரி. இவரது மகன் ரவி. இவர், சிவகாசி மாநகராட்சியில் பணிபுரிந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து உள்ளார். இந்த நிலையில் இந்த வாரிசு வேலையை தனக்கு வழங்க வேண்டும் என்று ரவியின் மனைவி ரதிலட்சுமி கேட்டுள்ளார்.

ஆனால் தனது பேரன் ராகுலுக்கு தான் வேலையை வழங்குவேன் என்று முருகேஸ்வரி கூறியுள்ளார். இதில் தொடர்ந்து மருமகள் மாமியாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று முருகேஸ்வரி, அவரது வீட்டில் அவரது உறவினர் கருப்பாயி தமயந்தி என்பவருடன் பேசிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் வந்த ரதிலட்சுமியின் அண்ணன் காளிராஜன் என்பவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த காளிராஜன் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டு திருத்தங்கல் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தங்கல் போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இருவரது உடலையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்தும் திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.