கல்லூரி மாடியிலிருந்து விழுந்த மாணவி பலி.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்.. வந்தவாசியில் பரபரப்பு!

 

வந்தவாசி அருகே கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அண்ணாசாமி முதல் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி. இவர், பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வெங்கடேஸ்வரி. இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் அர்ச்சனா (19). இவர், வந்தவாசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலையும் வழக்கம் போல கல்லூரிக்கு வந்திருந்த அர்ச்சனா, மதியம் 12 மணிக்கு கல்லூரியின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாணவி, உடனடியாக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “பேராசிரியர்கள் மாணவியை தவறாக திட்டியதாலே மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து 174(1) சட்ட பிரிவின் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், புகாரில் குறிப்பிடப்பட்டதுதான் காரணமா அல்லது தற்கொலை செய்துக் கொண்டதற்கு வேறேதும் காரணங்கள் உள்ளதா உள்ளிட்ட சந்தேக கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே உயிரிழந்த கல்லூரி மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரியின் 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.