சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவன் பலி.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

 

திருச்சியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் செம்பட்டு அடுத்துள்ள திருவளர்ச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் காமராஜ். இவரது மகன் வில்பர்ட் (14). இவர் திருச்சி புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியில் கடந்த 1-ம் தேதி மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வகையில் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் 30 மாத்திரைகள் அம்மாணவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவனோ அன்றைய தினமே பள்ளியில் இருக்கும்போது 10 மாத்திரைகளை சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீடு திரும்பிய அந்த மாணவனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் மகனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதனர். இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுளது.