கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி

 

தமிழ்நாட்டில் கோடை விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் முடிவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியார் பள்ளியில் அடுத்த கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், கோடை விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் தனிப்பிரிவில் 14417-ல் பெறப்பட்ட புகார் மனுவில், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், இதனால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார் பெறப்பட்டுள்ளது.

இப்புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்குமாறும், மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைக்க அழுத்தம் தரக் கூடாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.