கிணற்றில் தவறி விழுந்த மகன்.. காப்பற்ற முயன்ற தாயும் பலி.. துணி துவைக்க சென்ற இடத்தில் சோகம்!

 

மதுராந்தகம் அருகே துணி துவைக்கச் சென்ற தாயும், மகனும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நெல்வாய்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல் ராணி (35). இவரது மகன் பிரவீன் குமார் (15). இருவரும் தங்கள் வயல்வெளி பகுதியில் உள்ள கிணற்றுக்கு துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது, கிணற்றுக்கு அருகே அமர்ந்திருந்த பிரவீன் குமார் எதிர்பாராத விதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

உடனே மகனை காப்பாற்றுவதற்காக விமல் ராணியும் கிணற்றுக்குள் குதித்துள்ளார். இந்நிலையில், இருவரும் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளனர். வயலின் அருகே வேலை செய்து கொண்டிருந்தவர்கள் துணி துவைக்க சென்றவர்கள் நீண்ட நேரமாக காணவில்லை என சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, புடவை மட்டும் மேலே இருந்து இருவரும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உடனே போலீசார் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதற்குள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் நீரில் மூழ்கி இருவரையும் மீட்க முயற்சி செய்தனர். ஆனால், மழை காரணமாக கிணறு முழு கொள்ளளவு எட்டியுள்ளதால் நீண்ட நேரம் மூச்சு பிடிக்க முடியாமல் மேலே ஏறினர்.

அதற்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.