ஆம்பூரில் ரயில் மோதி அக்காள் - தங்கை பலி.. துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்!

 

ஆம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவளாத்தை இறங்கி கடக்க முயன்றபோது விரைவு ரயில் மோதி அக்காள், தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள வலையாம்பட்டு ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் வசந்தா (67). இவரது மகன் பிரகாஷ். வசந்தாவின் சகோதரி ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பழைய காலணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாவித்திரி (66). இவர்கள் 3 பேரும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தனர்.

ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க பிரகாஷ் கவுண்ட்டருக்கு சென்றார். அப்போது வசந்தாவும், சாவித்திரியும் ரயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் அக்காள், தங்கை மீது மோதியது. 

இதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார், வசந்தா மற்றும் சாவித்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மற்றும் சித்தி ரயிலில் அடிப்பட்டு இறந்ததை பார்த்து பிரகாஷ் கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.