மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.. பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்கிறது

 

பொறியியல் படிப்புக்கான புதிய கட்டணம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு தமிழ்நாடு அரசால் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி செயல்பட்டு வருகிறார். இந்த குழுவானது, மூன்று வகையான உயர்கல்வி படிப்புகளுக்கு புதிய கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்காக விண்ணப்பங்களை பெற்றிருக்கிறது. 

அதாவது, பி.இ., பி.டெக்., போன்ற பொறியியல் படிப்புகள், பாரா மெடிக்கல் எனப்படும் 17 வகையான துணை மருத்துவ படிப்புகள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் விண்ணப்பங்களை சமர்த்துள்ளன. 

இதில், பொறியியல் படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள், 25 சதவீதம் வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள், துணை மருத்துவ படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மாற்றப்படும் புதிய கட்டணம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அமலுக்கு வரும் புதிய கட்டண விகிதம் அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.