மதுரையில் அதிர்ச்சி சம்பவம்... இளைஞர் வெட்டி படுக்கொலை.. தண்ணீரால் பறிபோன உயிர்..!

 

மதுரையில் பாத்திரம் கழுவிய தண்ணீரால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மாடக்குளம் தனத்துவம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் அய்யனன். இவரது மகன் ஜெயக்குமார் (20). இவர், தனியார் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரது தாயும், தங்கையும் வீட்டு வாசலில் பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் வெளியேறும் கழிவு நீர் அருகில் இருந்த ஓட்டுநரான சோனைராஜ் (40) என்பவர் வீட்டு வாசலில் தேங்கியுள்ளது.

இது தொடர்பாக சோனைராஜ் பலமுறை கூறியிருந்ததால் ஜெயகுமாருக்கும், சோனைக்கும் கடந்த சில மாதங்களாக வார்த்தை மோதல் நிலவி வந்துள்ளது. இதனால் 2 பேருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் கழிவு நீர் வெளியேறிய உள்ளது. 

இதையடுத்து நேற்று நள்ளிரவு சோனைராஜ், ஜெயக்குமார் வீட்டுக்கு சென்று ஆபாசமாக பேசி பிரச்சினை செய்துள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சோனைராஜ் தான் மறைத்து கொண்டுவந்திருந்த அரிவாளை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயக்குமாரை சரமாரியாக வெட்டினார்.

இதனை தடுக்க வந்த அவரது தந்தை அய்யனனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அய்யனனை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.எஸ்.காலனி போலீசார், ஜெயக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சோனையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.