அதிர்ச்சி.. மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த வீரர் சுருண்டு விழுந்து திடீர் மரணம்!

 

ஈரோடு அருகே மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த கால்பந்தாட்ட வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசு ஆசிரியர் காலனியில் வசித்து வந்தவர் சுப்ரமணியம் (46). பத்திர எழுத்தராக பணிபுரிந்து வரும் இவர், தினமும் வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் மைதானத்திற்கு சென்ற அவர் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மயக்கமடைந்த அவர் பின்பக்கமாக விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சுயநினைவின்றி இருந்த சுப்ரமணியத்தை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலைக்கண்டு சக கால்பந்து வீரர்களும், சுப்ரமணியம் பெற்றோரும் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த கால்பந்து வீரர் சுப்பிரமணியம் தனது அணிக்காக பல்வேறு இடங்களில் கால்பந்து போட்டியில் விளையாடி அணிக்காக வெற்றி பெற்று தந்துள்ளதாக சக வீரர்கள் தெரிவித்தனர்.