அதிர்ச்சி.. கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. தாய் கண்டித்ததால் விபரீதம்!

 

சென்னையில் வீட்டு வேலை செய்யவில்லை என தாய் கண்டித்ததால், கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் டி.பி சத்திரம் 7வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் தாமோதரன். இவர், பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு சிந்து (21) என்ற மகள் இருந்தார். சிந்து, கோயம்பேடு அருகே உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

இந்த நிலையில் வீட்டில் எந்த வேலைகள் எதுவும் செய்வதில்லை என சிந்துவை அவரது தாய் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதே போல் நேற்றும் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்த சிந்துவை அவரது தாய் சுமதி அடித்ததாக தெரிகிறது. இந்நிலையில், மதியம் சுமதி ரேஷன் கடை சென்றுள்ளார். அவர் வீடு திரும்பிய போது, மகள் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிந்துவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிந்துவின் பெற்றோர் டி.பி சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த டி.பி சத்திரம் போலீசார், சிந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலைக்கு முன்பு சிந்து எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சிந்து தற்கொலை குறித்து அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.