அதிர்ச்சி.. கோவை கல்லூரி மாணவர் திடீர் மரணம்.. பரோட்டா காரணமா?

 

சூலூரில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன் (18). இவர், கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் கல்லூரிக்கு அருகே சக மாணவர்கள் 4 பேருடன் தனியாக அறை எடுத்து தங்கி படித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது நண்பர்களுடன் ஹேமச்சந்திரன் பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வழக்கம் போல் தனது அறையில் தூங்க சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு சாதாரணமாக விசாரித்து மெசேஜ் செய்துள்ளார். பின்பு தூங்க சென்றுவிட்டதாக தெரிகிறது. நண்பர்கள் காலை 7 மணிக்கு சக மாணவர்கள் எழுந்து பார்த்தபோது மாணவர் ஹேமச்சந்திரன் அசைவு இல்லாமல் கிடந்துள்ளார்.

இதனையடுது ஹேமச்சந்திரனை பாப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் ஹேமச்சந்திரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து சக மாணவர்கள் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி கோவை இ.எஸ்‌.ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரோட்டா சாப்பிட்டு உடனே படுக்கைக்கு சென்றதால் மாரடைப்பு ஏற்பட்டு மாணவர் உயிரிழந்தாரா அல்லது வேறும் ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.