அதிர்ச்சி! வாணாபுரம் 11-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை..! தமிழ்நாட்டில் தொடரும் சோகம்!

 

வாணாபுரம் அருகே 11-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள தென்கரும்பலூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரபு. கூலிதொழிலாளியான இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தரணி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் பிரியதர்ஷினி (16) வாணாபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரியதர்ஷினியை பெரியப்பா மகன் திட்டியதாக தெரிகிறது. இதனால், மனுடைந்த பிரியதர்ஷினி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அப்பகுதிமக்கள் தண்டராம்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் தண்டராம்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்து பிரியதர்ஷினியின் உடலை மீட்டனர். பின்னர் வாணாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வாணாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.