அதிர்ச்சி! சவரன் ரூ. 50 ஆயிரம் வரை உயரும்... 10 நாட்களில் கிறுகிறுக்க வைத்த தங்கம் விலை...!

 

தங்கம் விலை சவரன் ரூ. 50 ஆயிரம் வரை உயரும் என நகை விற்பனையாளர்கள் கனித்துள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு நேற்று அதிரடியாக உயர்ந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 110 ரூபாய் உயர்ந்து, 5,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 880 ரூபாய் அதிகரித்து 44,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை 44,040 ரூபாயை எட்டியதே உச்சமாக இருந்தது. ஆனால் வரலாற்றில் இல்லாத அளவிற்கு நேற்று தங்கம் விலை உயர்ந்து மக்களை அதிர்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், தங்கம் விலை மேலும் அதிகரிக்கலாம் என்றும் ஒரு சவரன் தங்கம் 50,000 ரூபாயை எட்டும் எனவும் நகை விற்பனையாளர்கள் கணித்துள்ளனர். மேலும் அதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவாலானதால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்திருப்பதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என தங்க, வைர நகை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.

கடந்த 9-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.41,240 என விற்பனையான நிலையில், நேற்று ஒரு சவரன் தங்கம் 44,480 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. விறு விறுவென அதிகரிக்கும் தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு 3,240 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தகக்து.