ஆபாச வீடியோக்களை காட்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. போக்சோவில் கைதான பள்ளி தலைமை ஆசிரியர்!!

 

ஓட்டப்பிடாரம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வரை வகுப்பறை உள்ளது. இந்த பள்ளியில் 8 மாணவ, மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தூத்துக்குடி அருகே மறவன் மடம் பகுதியைச் சேர்ந்த  ஜான்சன் (58) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியர் ஜான்சன் அங்கு பயிலும் 4-ம் வகுப்பை சேர்ந்த இரண்டு சிறுமிகளுக்கு தனது செல்போனில் ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியர் ஜான்சன் மீது கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதையடுத்து  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்  தலைமை ஆசிரியர் ஜான்சன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர், தொடக்கப் பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.