மார்ச் 8-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

மகாசிவராத்திரியை முன்னிட்டு வருகிற 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வருகிற மார்ச் 8-ம் தேதி மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு வருகிற 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைக்கு ஈடாக 23.03.2024 சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகாசிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் படி, அறிவிக்கப்படவில்லை என்பதால் 08.03.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.