மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி.. காலிங் பெல்லை அழுத்தியபோது நேர்ந்த சோகம்!!

 

திருத்துறைப்பூண்டி அருகே காலிங் பெல்லை அழுத்திய போது மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளத்தூர் கிராமம் பாமந்தூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ரவி. விவசாயி. இவரது மனைவி கலைவாணி. இந்த தம்பதிக்கு அஸ்வின் (14) என்ற மன் இருந்தான். இவர், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில், நேற்று அதே தெருவில் உள்ள அவனது உறவினர் வீட்டில் அஸ்வின் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி உள்ளான். இதில் மின்சாரம் தாக்கி சிறுவன் அஸ்வின் தூக்கி வீசப்பட்டான். 

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அஸ்வின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த அஸ்வினின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலிங் பெல்லை அழுத்திய போது மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.