பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தை மீது வீடு புகுந்து தாக்குதல்!! வேலூரில் பரபரப்பு

 

வேலூரில் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞரை தட்டிக்கேட்ட தந்தை மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் சந்தைமேடு பகுதியில் வசித்து வருபவர் திருமால். இவர் சிறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரமா. இந்த தம்பதிக்கு ப்ளஸ்-1 படிக்கும் மகளும் உள்ளனர். இந்த நிலையில், திருமாலின் மகள் பள்ளிக்கு செல்லும்போது, சந்தோஷ் என்ற இளைஞர், கேலி கிண்டல் செய்துள்ளார்.

மேலும், தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண், தனது தந்தையிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதையடுத்து, சந்தோஷை சந்தித்த திருமால், அவரை கண்டித்துள்ளார். மேலும், தாக்குதல் நடத்திய அவர், சந்தோஷுக்கு சொந்தமான இனிப்பு கடையையும், அடித்து நொறுக்கியுள்ளார்.

இதனால் கடும் கோபம் அடைந்த சந்தோஷ், தனது உறவினர்கள் 20 பேருடன், திருமாலின் வீட்டிற்கு சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த 7 பேரும், அரசு மருத்துவமனையில் தீவிர சிசிக்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், திருமாலின் குடும்பத்தினரும், பொதுமக்கள் சிலரும், தங்களது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, உறவினர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி திருநாவுக்கரசு, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.