இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்து.. 6 பேர் உயிரிழப்பு!! திருவண்ணாமலையில் பயங்கரம்

 

திருவண்ணாமலையில் இருவேறு விபத்து சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிகிச்சைகாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வாசுகி மற்றும் சாந்தி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலையில் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் உள்ள பெரியகோளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா, காமாட்சி, சஞ்சய், சக்திவேல், செல்வம் ஆகிய 5 நபர்களும் காரில் சென்று கொண்டிருந்த போது, பெரியகோளப்பாடி கிராமம் அருகே எதிரே வந்த சரக்கு லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் இளையராஜா, காமாட்சி, சக்திவேல் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த சஞ்சய் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று இரவு மற்றும் இன்று காலையில் ஏற்பட்ட இருவேறு விபத்து சம்பவங்களில் அடுத்தடுத்து 6 பேர் உயிரிழந்திருப்பது திருவண்ணாமலை சுற்றுவட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.