4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை..!

 

கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதையடுத்து அடுத்த 5 நாட்களுக்கு டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடாத அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதன் காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் நிவாரணமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வரும் 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இன்றும், நாளையும் பல இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவசர உதவிஎண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் -1070, மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் - 1077, வாட்ஸ் அப் எண் - 94458 69848 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக மிக கனமழை பெய்துவருகிறது. மழைப்பொழிவின் அளவை பொறுத்தவரை அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 39.4 செ.மீ மழையும், சாத்தான்குளத்தில் 30.6 செ.மீ மழையும், 10 மணிநேரத்தில் 39.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.