எலி கடித்து உடல் நலம் பாதிப்பு.. கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட நர்ஸ்..!

 

தூத்துக்குடியில் எலி கடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடையாமல் அவதிப்பட்டு வந்த நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோடு பிஎஸ்என்எல் ஊழியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் குருவம்மாள் (32). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கொரோனா தொற்று காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவன்னையில் தற்காலிக நர்சாக பணியில் சேர்ந்து வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குருவம்மாளை எலி கடித்தது. இதனால் அலர்ஜி ஏற்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவருக்கு சரிவர குணமாகாததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து அலர்ஜி பாதிப்பு இருந்தது.

இதனால் வேதனை அடைந்த குருவம்மாள் கடந்த 18-ம் தேதி வீட்டில் திடீரென்று கத்தியால் தனது கழுத்து மற்றும் கைகளில் அறுத்துக் கொண்டார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தவாறு உயிருக்கு போராடினார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குருவம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குருவம்மாளின் தாயார் வசந்தி (53) அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.