முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி!

 

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மனைவியும், கனிமொழியின் தாயாருமாகிய ராஜாத்தி அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள். இவர், சென்னை சிஐடி காலனியில் உள்ள மகள் கனிமொழி உடன் வசித்து வருகிறார். இவருக்கு அண்மை காலமாகவே அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சினை இருந்து வருகிறது. திட உணவுகள் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் திரவ வகை உணவுகள் மட்டுமே சாப்பிட்டு வருகிறார்.  

இதற்காக கடந்தாண்டு ஜெர்மனியில் உள்ள போன் பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்று 20 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று இருந்தார். அப்போது அவருடன் கனிமொழி மற்றும் அவரின் மகன் ஆதித்யன் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜாத்தி அம்மாள் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பபட்டுள்ளது. உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. உடல்நிலை சீரானதும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளனர்.

மேலும், ராஜாத்தி அம்மாளின் உடல்நிலை சீராக இருப்பதால், சிகிச்சை முடிந்து விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.