சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரயில் பாலம் சரிந்து விபத்து.. தெற்கு ரயில்வே விசாரணை!

 

சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரயில் பாலம் சரிந்து விபத்துக்குள்ளான நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரி மற்றும் பரங்கிமலை பகுதியை இணைக்கும் வகையில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் நடைபெற்று வந்த பாலப்பணியின் போது விபத்து ஏற்பட்டுள்ளது.  

பறக்கும் ரயில் பணிக்கு பாலம் அமைக்கும்போது இரு தூண்களுக்கு இடையே 80 அடி நீளமுள்ள பாலத்தின் பகுதி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பாரம் தாங்காமல் மேம்பாலம் திடீரென கீழே சரிந்து விழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இந்த விபத்தில், நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பாலம் பணி நடைபெற்று வரும் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பாலம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஆதம்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை ஆதம்பாக்கம் - பரங்கிமலை பறக்கும் ரயில் மேம்பால விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.