கர்ப்பிணி பெண் திடீர் மரணம்... சேலம் அரசு மருத்துவமனையில் நேர்ந்த சோகம்!!

 
சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட கர்ப்பிணி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கீர்த்திவர்மன் (27). பூ வியாபாரியான இவருக்கு நிஷாந்தினி (22) என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகள் உள்ளாள். இந்நிலையில், நிஷாந்தினி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். 
இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி காலை நிஷாந்தினிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பிரசவத்திற்காக அவரது உறவினர்கள் வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள், நிஷாந்தினியை பரிசோதனை செய்து அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். 
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் நிஷாந்தினி சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் பிரசவ வலியால் துடிதுடித்த அவர் எதிர்பாராமல் திடீரென உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, முறையான சிகிச்சை அளிக்காததால் தான் உயிரிழந்தார் என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர். 
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் கர்ப்பிணி சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.