நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பயிற்சி மருத்துவர் திடீர் தற்கொலை... மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் உயிரிழந்த சோகம்!!

 

மேலூர் அருகே மருத்துவ மேல்படிப்புக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பயிற்சி மருத்துவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட நிலையில், தந்தையும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் அழகன் (56). இவரது மனைவி நாச்சம்மாள். இவர்களுக்கு தமிழ்வாணன் (24) என்ற மகனும், சத்யபிரபா என்ற மகளும் உள்ளனர். இதில் சத்யபிரபாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. மேலூரில் உள்ள காந்திநகரில் வாடகை வீட்டில் அழகன், நாச்சம்மாள், தமிழ்வாணன் வசித்து வந்தனர். 

இந்த நிலையில் தமிழ்வாணன் டாக்டர் படிப்பு முடித்துவிட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை செய்து வந்தார். மேலும் அவர் மருத்துவ மேற்படிப்புக்காக அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். நேற்று அழகனுக்கும், நாச்சம்மாளுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் வீட்டில் தனி அறை ஒன்றில் நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த தமிழ்வாணன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து அழகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தமிழ்வாணனின் உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 இதற்கிடையே வீட்டில் இருந்த அழகனை திடீரென காணவில்லை. அவரை குடும்பத்தினர் தேடியபோது குளியல் அறையில் அழகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மகன் இறந்த துக்கத்தில் அழகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.