கிணற்றில் தவறி விழுந்து ப்ளஸ்-2 மாணவி பலி... வாணியம்பாடி அருகே சோகம்!!

 

வாணியம்பாடி அருகே ப்ளஸ்-2 மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து உள்ள தும்பேரி அண்ணாநகர் இளையான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் திருமால். இவரது மகள் இலக்கியா (17). இவர் தும்பேரி அரசுப் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பிற்பகல் அவர்களுக்கு சொந்தமான நிலத்திற்கு சென்று விவசாய கிணற்றின் அருகில் துணி துவைத்து கொண்டிருந்தார். 

அப்போது திடீரென வழுக்கி கிணற்றில் தவறி விழுந்து விட்டார். சத்தத்தை கேட்டு அருகில் இருந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்து பார்ப்பதற்குள் தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி தீயணைப்பு வீரர்கள் பொது மக்கள் உதவியுடன் கயிற்றின் மூலம் தண்ணீரில் மூழ்கிய மாணவியை பிணமாக மீட்டனர். 

இதைக்கண்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. பின்னர் உடலை கைப்பற்றிய அம்பலூர் போலீசார் பிரதே பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.