ப்ளஸ்-2 மாணவியின் கழுத்தை பிளேடால் கொல்ல முயற்சி... மர்ம நபர்கள் தப்பியோட்டம்! 3 பேருக்கு வலைவீச்சு

 

இடைகழிநாடு அருகே ஆட்டோவிற்காக காத்திருந்த ப்ளஸ்-2 மாணவியின் கழுத்தை அறுத்து 3 பேர் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்து உள்ள இடைகழிநாடு அருகே 56, நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல். இவரது மகள் சுவிதா (17). இவர் கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வருகிறார். தினமும் நல்லூர் பகுதியில் இருந்து , ஷேர் ஆட்டோ மூலம் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம். 

இந்த நிலையில் வழக்கம் போல ஷேர் ஆட்டோவிற்காக வீட்டின் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் பள்ளி மாணவி காத்திருந்தார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர். கையில் எடுத்து வந்த பிளேடு வைத்து மாணவியின் கழுத்தை அறுத்துள்ளனர். இதனை அடுத்து மாணவியின் கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறுவதை பார்த்த அங்கு இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பிடிக்க முயன்றனர்.

அப்போது அவர்கள் 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்று உள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்து மாணவியை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மாணவி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூனாம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவியின் கழுத்தை அறுத்து தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.