மகளிர் உரிமைத் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம் அதிரடி!

 

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையே, இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இதுவரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையை கடந்த 10-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இது வரையிலும், 3 மாதத்திற்கான தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு எதிர்த்து மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாடு அரசு கடனில் உள்ளது. இந்த சூழலில் இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வருவது மேலும் கடன் சுமையை அதிகரிக்கும். அதனால் இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

அதனை தொடர்ந்து, அந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.