சென்னையில் தனியார் நகர பேருந்துகளுக்கு அனுமதி... மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு!! 

 

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி அளித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 625 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள், மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்கிப்பட்டு வருகின்றன. தினசரி சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இதில், பெண்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், முதியவர்களுக்கான சிறப்பு சலுகை, மற்றும் 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு உள்ளிட்ட திட்டங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில் சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025-ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இயக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தனியார் பேருந்துகளின் வரவு என்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியாகவே உள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்கத்தின் மூலம் பேருந்துகளுக்காக காத்திருக்கும் நேரமும் குறையும். எனினும் இந்த தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் இயங்குமா அல்லது புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

மாநகரப் போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து நாளை அரசு பேருந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மாநகர போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனைகள் முன்பு நாளை போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு அறிவித்துள்ளது.