500-க்கு 185 மார்க் வாங்கி தேர்ச்சி.. மகனை கேக் வெட்ட வைத்து கொண்டாடிய பெற்றோர்!!

 

பரமக்குடி அருகே 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 4 பாடங்களில் ஜஸ்ட் பாஸ் ஆகி 185 மதிப்பெண்கள் எடுத்த மாணவன் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ வைரலாக வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைராஜ். இவரது மகன் நவீன்கரன். இவர், பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துள்ளார். 

அண்மையில் வெளியான பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களில் தலா 35 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 45 மதிப்பெண்கள் என மொத்தம் 185 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

அவனது மொத்த மதிப்பெண் 500-க்கு 185-தான் என நினைத்து, அந்த மாணவனின் பெற்றோர் வருத்தம் அடையவில்லை. அதுவும் ஒரு சாதனைதான் என நினைத்து மகனை கொண்டாடி இருக்கிறார்கள். ப்ளஸ்-1, ப்ளஸ்-2 தேர்வுகளில் இன்னும் நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடு என உற்சாகப்படுத்தி உள்ளனர்.

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதால் அந்த மாணவன் தனது உறவினர்களுடன் கேக் வெட்டி சந்தோசத்தை பகிர்ந்துள்ளார். நான்கு பாடங்களில் ஜஸ்ட் பாஸ் 35 மதிப்பெண்களுடன் 185 மதிப்பெண்கள் எடுத்த இந்த மாணவனின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கேக் வெட்டி சந்தோசத்தை பகிரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.