தேசிய நெடுஞ்சாலையில் லாரி - ஆம்னி பேருந்து மோதி விபத்து.. 2 பேர் உடல் நசுங்கி பலி!

 

திருச்சி தேசிய நெடுஞ்சாலை பால்பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து கம்பம் நோக்கி 34 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து திருச்சி சஞ்சீவி நகர் அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற செங்கல் லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கு காரணமாக அப்பகுதி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.